இது மக்களாட்சி என சொல்ல இன்னும் ஏதேனும் மிட்சம் இருக்கிறதா?

மகாராஷ்டிரத்தில் ஏதும் செய்யாமல் இருக்கிறார்களே என அரசியல் நோக்கர்கள் ஏமாந்து போன ஒரு தருணத்தில், நள்ளிரவு ஆட்டத்தை அதிரடியாய் அரங்கேற்றியிருக்கிறார்கள் நவீன ‘சாணக்கியர்கள்’. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனாவுடன் கூட்டணி முடிவாகிவிட்டதென்றும் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் நாட்டின் பெரும்பான்மையான நாளிதழ்கள் சனிக்கிழமை காலையில் செய்தி வெளியிட்டிருந்தன. செய்தித்தாளில் வந்தது உண்மையா அல்லது காலையில் வந்துகொண்டிருக்கு பிரேக்கிங் நியூஸ் உண்மையா என ஒரு கணம் மக்கள் குழம்பிப் போனார்கள். ஆனால், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருடன் நள்ளிரவு கூட்டணி அமைத்து அதிகாலை ஐந்தரை மணிக்கு முதலமைச்சர் – துணை முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வைத்த டெல்லி சாணக்கியர்கள் இந்தக் குழம்பிய நிலையைக் கண்டு சிரித்திருக்கக்கூடும்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும் பாஜக – சிவசேனா கட்சிகள் மற்றொரு கூட்டணியிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. ஆக, பாஜக தலைவர்கள் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை முன்வைத்து இந்து தேசியவாத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதும், அமோக வெற்றியை பாஜக கூட்டணியால் பெறமுடியவில்லை. ஆட்சியமைக்கத் தேவையான 145 எம்.எல்.ஏக்கள் போதும் என்றாலும் பாஜகவால் 105 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆட்சியமைக்க சிவசேனாவின் தயவு பாஜகவுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது. ஆனால், கடந்த காலத்தைப் போல வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க சிவசேனா தயாராக இல்லை. துணை முதலமைச்சர் பதவி, முக்கிய அமைச்சரவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதில் உறுதியாக நின்றது சிவசேனா. சித்தாந்த பங்காளிகளான பாஜகவும் சிவ சேனாவும் எப்படியும் சேர்ந்து ஆட்சியமைத்து விடுவார்கள் என்றே அனைத்து தரப்பினரும் எதிர்ப்பார்த்தனர். இழுபறி நீடித்துக்கொண்டிருந்த வேளையிலும்கூட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அமைதி காத்தன.

ஒருகட்டத்தில் சிவ சேனாவை பாஜகவுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்கிற நிலைக்கு வந்தது. சித்திரங்கள் மாறின… ‘அரசியல் வேறுபாடுகளை’ மறந்து சிவ சேனாவுடன் தே.வா. கா. – கா பேச்சு வார்த்தை நடத்தின. நீண்ட இழுபறிக்குப் பின், உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் ஆட்சியை நடத்த குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சரத் பவார் தரப்பு கூறியது.

தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 24 அன்று வெளியாகி, சரியாக இரண்டு மாதங்கள் கழித்து நீண்ட இழுபறிக்குப் பிறகு, மகாராஷ்டிரத்தில் அரசு அமைந்துள்ளதாக பெருமூச்சு விட்ட நிலையில், ‘டெல்லி சாணக்கியர்கள்’ புதிய திரைக்கதையுடன் காட்சியை மாற்றியமைத்துவிட்டனர்.

டெல்லி சாணக்கியர்களின் மாற்றியமைத்த திரைக்கதையின் ஜனநாயக தன்மை குறித்து அலசும் முன் ஒரு ட்விட்டர் பதிவுடன் பிளாஸ் பேக்கை அறிந்துகொள்வோம். பாஜக -சிவ சேனாவுடன் நடத்திய இழுபறி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, தே.வா. கா. உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திக்கு பதிலளிக்குவிதமாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஒரு ட்விட்டர் பதிவை எழுதியிருந்தார்.

“பாஜக நிச்சயம் ஒருபோதும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை, இல்லை..இல்லை.. மற்றவர்கள் அமைதியாக இருந்தபோது, அவர்களுடைய ஊழலை நாங்கள்தான் வெளிக்கொண்டுவந்தோம்” என்றது பட்னாவிஸின் ட்விட்.

பாஜகவுக்கும் முந்தைய காங்கிரஸ் – தே. வா. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்பிலான பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், அதில் அஜித்பவாருக்கு முக்கிய இடம் இருந்ததாகவும் குற்றச்சாட்டை எழுப்பியது பாஜக. இதை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜக ஆட்சியைப் பிடித்ததும் 2014-ஆம் ஆண்டு பாசன ஊழலை விசாரிக்க உத்தரவிட்டப்பட்டது. விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் பாவர் குடும்பத்தினர் மீது கூட்டறவு சங்க முறைகேடு குற்றச்சாட்டும் காத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லி சாணக்கியர்கள் புதிய திரைக்கதையை அமைத்துள்ளனர்; அஜித் பாவரை மத்திய அரசாங்கத்தின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி இணைத்துள்ளனர். யார் யாருடனும் கூட்டணி சேரலாம், இதுதான் ஜனநாயகம். சரிதான்… ஜனநாயகம் என்ன பாடுபட்டிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

பட்னாவிஸுக்கும் அஜித் பவாருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு அவசர அவசரமாக பதவி பிரமாணம் செய்து வைத்து ஆளுநர் பகத் சிங் கோசியாரி, பாஜகவின் திட்டத்தை செயல்படுத்துபவராக நடந்துகொண்டிருக்கிறார். முன்னதாக, மகாராஷ்டிர பாஜகவின் அங்கமாக, பாஜகவின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இவர் இசைவாக நடந்துகொண்டார் என்பதும் நினைவு கூறத் தக்கது.

பாஜக ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையை திரட்ட முடியாத நிலையில், தனது பதவியை நவம்பர் 9-ஆம் தேதி பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அவருக்கு 48 மணி நேரம் வழங்கியிருந்த ஆளுநர், சிவ சேனா 24 மணி நேரம் ஆட்சியமைக்க கால அவகாசம் கேட்டபோது மறுத்தார். தேசியவாத காங்கிரசுக்கு 24 மணி நேரம் அளித்து, அது முடியும் முன்னரே குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமலாக்கப்படுவதாக அறிவித்தார். பொம்மை தலைமையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளிப்படையாக மீறியது இந்த அமலாக்கம்.

மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் வாங்க, பாஜகவுக்கு அவகாசம் வழங்கவே இந்த குடியரசு தலைவர் ஆட்சி அமலாக்கத்தைக் கொண்டுவந்தார் ஆளுநர். அதுபோல, நினைத்தது நடந்தது. தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டு அஜித் பவாரும் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கிறார்கள், அவர் யார் என்கிற விவரம் எதையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. அவர்களுடைய கையெழுத்து, அவர்கள் ஆதரவளிப்பதாக சொன்னது உண்மைதானா என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் எவ்வித விசாரணையும் ஆளுநர் செய்யவில்லை.

இதில், உச்சகட்ட ஜனநாயக படுகொலையாக, ஆளுநரும் குடியரசு தலைவரும் டெல்லி சாணக்கியர்களின் கைப்பாவைகளாக இந்த விசயத்தில் செயல்பட்டிருப்பதைச் சொல்லலாம். முந்தைய நாள் ஒரு கூட்டணி தங்களிடம் பெரும்பான்மை உள்ளதாக அறிவிக்கிறது. இரவோடு இரவாக மாநிலத்தில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுகிறது. குடியரசு தலைவர் ஆட்சி நீக்கப்படுவதற்கு முன் மத்திய அமைச்சரவை கூடி தனது பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர், ஆளுநருக்கு உத்தரவை அனுப்புவார். இதெல்லாம் நள்ளிரவில் எப்போது நடந்தது?

பிரிவு 12-ஐப் பயன்படுத்தி, அவசர கால நிலை காரணமாக பிரதமர், குடியரசு தலைவர் ஆட்சியை மாநிலத்திலிருந்து திரும்பப் பெறலாம். இந்தப் பிரிவைப் பயன்படுத்தியிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், அப்படியென்ன அவசர நிலை என்பது குறித்து விளக்கப்படவில்லை.

பாஜக ஆட்சி தொடர, 36 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். இந்த எம்.எல்.ஏக்களை அஜித் பவார் எங்கிருந்துகொண்டுவருவார் என்பது டெல்லி சாணக்கியர்களுக்கே வெளிச்சம். பாஜகவின் அரசியல் தந்திரங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் காங்கிரசால் என்ன செய்ய முடியும்? கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மீது பாய்ந்த வழக்குகள் ஆண்டுகணக்கில் நீதிமன்றத்தில் தூங்கும்போது சரத் பவாரால் என்ன செய்துவிட முடியும்?

“அஜித் பவார் ரூ. 70 ஆயிரம் கோடியை பாசன திட்டத்துக்காக பயன்படுத்தினார். அந்தப் பணம் எங்கே போனது? அந்த தண்ணீர் எங்கே போனது? ஒரு சொட்டுகூட தண்ணீர் இல்லையே?” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அனல் பறக்கும் பேச்சின் தகிப்பு இன்னமும் மறையவில்லை.

கர்நாடகா, கோவா, அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மையே பெறாமல், அல்லது முன்னாள் எம்.எல்.ஏக்களை வாங்கி தனது சுவடே இல்லாத திரிபுராவில் ஆட்சியமைக்க திட்டம் தீட்டி செயல்படுத்திக் காட்டிய ‘சாணக்கியர்’, ஊழல் குறித்து ஏன் இத்தனை தூரம் அலட்டிக்கொள்ளப்போகிறார்?

காங்கிரசின் ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி குறித்து பேசியே ஆட்சியைப் பிடித்தது பாஜக. பயங்கரவாதிகளிடம் கருப்புப் பண புழக்கத்தை ஒழிப்பேன் என சொல்லி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை கொண்டுவந்த பாஜக, பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடம் தேர்தல் நிதி வாங்கியிருப்பதாக ஆதரத்துடன் வெளியாகியிருக்கிறது. ஆக, பாஜகவிடன் எந்த அறமும் பாக்கியில்லை.

பல கட்சி ஜனநாயகத்தில் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டு சேரலாம் என்பதைச் சொல்லி சொல்லியே மக்களை இத்தகைய கீழிறங்கிய நிலையைக் காணப் பழக்கப்படுத்திவிட்டார்கள். ஒருமுறை வாக்களித்தபின், மக்களின் ஜனநாயக கடமை முடிந்துவிடுகிறது. எத்தகைய பொய் வாக்குறுதிகளை கூறினாலும், எத்தகைய தகிடு தத்தங்களை செய்தாலும் மக்களால் அதன்பிறகு எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. மக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது மக்களாட்சி என சொல்ல இன்னும் ஏதேனும் மிட்சம் இருக்கிறதா? ‘சர்வாதிகார ஜனநாயகம்’ என சொல்வதே சரியாக இருக்கும். இனியும் ஏன் பூசி மொழுக வேண்டும்? வெளிப்படையாகவே அறிவித்துவிடுங்கள்.

தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?

ரஜினிக்கு விருது கொடுத்து பாஜக ஏன் குளிர்விக்கப்பார்க்கிறது?

கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தர இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய கலாச்சார துறை அமைச்சகம். இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ரஜினிக்கு முன்பே திரைப்படங்களில் நடிக்க வந்தவர், நடிப்பில் அவரைவிடவும் திறனையாளரான கமல்ஹாசனுக்குத் தராமல், ரஜினிக்கு தருவதா என சினிமா ஆர்வலர்கள் ஒருபக்கம் விமர்சிக்கிறார்கள். ஆந்திர அரசு சமீபத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவுரவித்தது. இதில் கமலுக்கு முதல் ஆண்டும், ரஜினிக்கு அடுத்த ஆண்டும் விருதுகள் அளிக்கப்பட்டன என்பதை இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. ஒரு மாநில அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்புக்கூட, மத்திய அரசாங்கத்துக்கு இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னொரு பக்கம், அரசியல் தொடர்புடையது! சினிமா – கலை – அனுபவம் போன்றவற்றைக் கடந்து சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தப்போகும் ‘அரசியல்’ தொடர்பான சர்ச்சை அது. ரஜினிகாந்தை அரசியலில் இழுக்க கடந்த ஆறாண்டுகளாக படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது பாஜக தரப்பு. அவரை எப்படியெல்லாம் ‘குளிரிவிக்கலாம்’ என பாஜக தலைவர்கள் சதா யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள் போல. இந்த முயற்சிகளில் ஒரு பகுதியாகத்தான் இந்த விருது வழங்கப்படவிருக்கிறது என்பதே அரசியல் தரப்பிலிருந்து எழுந்திருக்கும் சர்ச்சை.

விருது அறிவிப்பு காலத்தை நோக்கும்போது, அரசியல் நோக்கங்கள் அதிகமாக உள்ளது தெளிவாகவே புலனாகிறது. ஜனவரியில் ரஜினிகாந்த் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று வதந்திகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், தனது நீண்ட நாள் நண்பரான ரஜினியை குளிர்விக்க, ‘நீங்க நம்ம ஆளுதான்’ என்பதை மறுபடியும் நினைவூட்ட இந்த விருதை பாஜக அரசாங்கம் அறிவித்திருக்கலாம்.

2014-ஆம் ஆண்டு இந்திய அரசியலில் எப்போதும் இல்லாத வகையில் ‘பிரதமர் வேட்பாளராக’ நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி, தனிப்பட்ட முறையில் ரஜினியை சந்தித்து ‘தங்களுடைய நட்பை’ தேர்தல் ஆதாயத்துக்காக வெளிப்படுத்தினார். வெளிப்படையாக மோடியை ஆதரிக்க விட்டாலும், (அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) தேர்தல் நேரத்தில் இருவர் சந்திக்கொள்வது எதற்காக என்பதை ரஜினி அறியாமல் சந்தித்திருக்கமாட்டார். ஆகவே, அப்போதே பாஜகவின் ‘நெருங்கிய’ உறவாகிவிட்டார் ரஜினி.

நடிகர் கமல்ஹாசனின் ‘மைய அரசியலை’ யூகித்ததாலோ என்னவோ, அவரை அப்போதிலிருந்து தள்ளிவைத்து பார்த்தது பாஜக. ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்கிறது.

இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட கால திட்டம்.

இதுபற்றி ரஜினியின் மனநிலை என்னவாக இருக்கிறது? நடிகர் ரஜினிகாந்த் தான் உண்டு, தன்னுடைய தொழில் உண்டு, தன்னுடைய ஆன்மீகம் உண்டு என வாழ நினைக்கும் மனிதர். அவருடைய ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை.

ஆனாலும், தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் ‘ஆன்மிக’ திணிப்புகளை தன் படங்களில் இலைமறை காயாக காட்டியபோதும், அவை எதுவும் தமிழகத்தின் இயல்புத்தன்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.

திராவிட அரசியலின் பின்னணியில் அரசியலுக்கு வந்து வெற்றி கண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற ஆளுமையாக ரஜினியால் ஒருபோதும் வரமுடியாது என்பதை அவரும் அறிந்தே இருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனால் பாஜகவுக்கு இது பொருட்டில்லை.

‘ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற ஒற்றை வரி பிரச்சாரத்தை முன்னிறுத்திய முப்பது ஆண்டுகளில் பாஜக அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தையும் தங்களுடையதாக்க பாஜகவினர் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள். இன்று சட்டம் – அரசியலமைப்பு – நீதிமன்றம் என அனைத்தையும் தலைகீழாக மாற்றும் அளவுக்கு அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து நிற்கிறது.

ஒற்றை மதத்தை முன்னிறுத்திய பெரும்பான்மைவாத அரசாக அது விசுவரூபம் எடுத்துள்ளது. ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்காகத்தான் இத்தனை கவனிப்புகள்!

இந்தப் பின்னணி காரணங்களுக்கு தமிழக மக்கள் என்ன எதிர்வினையை செய்ய இருக்கிறார்கள்? ரஜினி – பாஜக கூட்டணியை மக்கள் ஏற்பார்களா? திராவிட பாரம்பரியத்தில் வந்த திமுக – அதிமுக கட்சிகள் முன்பு ரஜினி – பாஜக கூட்டணி வெல்லுமா? போன்ற கேள்விகளுக்கான விடையை எதிர்காலமே சொல்லும்.

குடியுரிமை சட்ட திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்பு திட்டங்களுக்கு இணையானது!

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

நாசி கட்சி (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’)யின் தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக்கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வதிக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

1920களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ஆம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ஆம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே அவர்கள் ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டுவரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்தனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாக பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

சித்தாந்த எதிரியை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறதா காங்கிரஸ்?

அண்மையில் கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பிறகு, அம்மாநிலம் முடக்கத்துக்கு உள்ளாகியிருப்பது, காஷ்மீர் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருப்பது, பொருளாதார மந்தநிலை, ஐஐடியில் தொடரும் மரணங்கள் இப்படி சூடான பல விசயங்களை விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி. ஆர். பாலு ஒரு விசித்திரமான பிரச்சினையோடு நாடாளுமன்றம் வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார் டி. ஆர். பாலு.

மிகச் சமீபத்தில் சோனியா, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டது மோடி அரசு. சுமார் 3000 பேரைக் கொண்ட இந்த சிறப்பு பாதுகாப்பு குழு, தேர்ச்சி பெற்ற கமாண்டோக்களைக் கொண்டது. இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பில் டெல்லி போலீசைச் சேர்ந்த 100 மட்டுமே இருப்பர். காலம்காலமாக அதிஉயர் பாதுகாப்பில் இருந்த காந்தி குடும்பத்துக்கு, சிறப்பு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தற்போது கூடியிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் பல காங்கிரஸ் எம்.பிக்கள் பேசினர். ராகுல் காந்திக்கும் ப்ரியங்கா காந்திக்கும் அச்சுறுத்தல் இருந்ததாலேயே சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக பலரும் பேசினார்கள். அவர்கள் விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லவில்லை. ஆனால், டி. ஆர். பாலு பேசும்போது விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் என அமைப்பின் பெயர் குறிப்பிட்டு பேசினார்.

சர்வதேச அளவில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு, இப்போது பெயரளவில் கருத்தியல் ரீதியாக மட்டும் வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர் சிலர் இணைந்து விடுதலை புலிகள் அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட செத்துப்போன ஒரு இயக்கத்தை காரணம் காட்டி, சோனியா காந்திக்கு பாதுகாப்பு கேட்கிறார் டி.ஆர். பாலு என இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் மக்கள் கேலி செய்தனர்.

உண்மையில் காங்கிரசுக்கும், அதனுடன் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் காலம் 2008-ஆம் ஆண்டிலேயே நின்றுவிட்டதோ என கேள்வி எழுப்புகிறது மேற்படியான விவகாரத்தில் இவர்கள் நடந்துகொள்ளும் விதம். தொடர்ச்சியான வெற்றிகள், பதவிகள் கண்ட மிதப்பு இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாடு இருக்கும்போது, ஒரு எதிர்க்கட்சிக்குரிய பணியை காங்கிரஸ் செய்கிறதா? பாஜக அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் எந்தப் பாதையில் பயணிக்கிறது? 70 ஆண்டுகாலமாக பேணிக்காத்த மதச்சார்பின்மை – பன்மைத்தன்மை எனும் சித்தாந்தங்களை அழித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மைவாதத்தை எப்படி காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது?

காங்கிரசும் வாரிசு அரசியலும்

2013-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியை பாஜக, பிரதமர் வேட்பாளராக களமிறக்கியபோது,‘பரம்பரை பரம்பரையாக அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசு பிரதமராக வேண்டுமா, மக்களில் ஒருவராக சாதாரண டீக்கடைக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர் பிரதமராக வேண்டுமா’ என பாஜக தரப்பில் முழக்கம் வைக்கப்பட்டது. அப்போதுதான் 2014-ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து ராகுல் காந்திக்கு காங்கிரசில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியை குறிவைத்தும் தன்னை எளியவராகக் காட்டிக் கொண்டும் மோடி ஆட்சியைப் பிடித்தார்.

எனவே, காங்கிரசின் வாரிசு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதா; ஒட்டுமொத்தமாக இந்தியாவிலேயே வாரிசு அரசியல் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. வாரிசு அரசியல் என மூச்சுக்கு முந்நூறு முறை சொன்ன பாஜகவில்தான் இப்போது வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது என்பது தனிக்கதை. இங்கே நாம் பேச வேண்டியது வாரிசு அரசியலால்தான் காங்கிரஸ் தோற்றதா என்பதைத்தான்.

இந்தியா போன்ற வளரும் நிலையில் உள்ள ஜனநாயக நாடுகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது என்றே உலகளாவிய அரசியல் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். ஜனநாயகத்தின் அடுத்தக்கட்டத்தில் அதுதானாகவே உதிர்ந்து விழும் என்பது அவர்களுடைய கருத்து. ஆக, காங்கிரசின் தோல்வி என்பது ஒரு சித்தாந்தம் அசுரத்தனமாக எழுந்து நின்றதால் ஏற்பட்ட பக்க விளைவு. அது பாஜகவின் பெரும்பான்மை வாதம், இந்து தேசியவாதம் எனும் சித்தாந்தம்.

பெரும்பான்மை வாதத்தை, இந்து தேசியவாதத்தை காங்கிரஸ் இனம் கண்டதா?

பாஜகவின் இந்து தேசியவாதம் குறித்து மிதப்பான நிலையிலேயே கடந்த 30 ஆண்டுகாலமும் காங்கிரஸ் அணுகியது. காங்கிரசில் இருந்தவர்களே கூட அந்த சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களாக இருந்தனர். மதச்சார்பின்மைக்கும், பெரும்பான்மைவாதத்துக்குமான வேறுபாட்டை தெளிவுபடுத்த அங்கே சரியான ஆட்கள் இல்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. சோனியா காந்தியை வெளிநாட்டவர், அவர் இந்திய பிரதமராக பதவி ஏற்கக்கூடாது என பாஜக தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதே, காங்கிரஸ் தலைமை விழித்துக்கொண்டிருக்க வேண்டும். இறுதியில் அந்த பிரச்சாரம் வென்று, சோனியா பிரதமராகவே முடியவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. பெரும்பான்மை தேசியவாதம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருப்பதைக் காட்டிய முக்கியமான குறிகாட்டி இது. அதிலும் காங்கிரஸ் கோட்டை விட்டது.

இன்னொறு முக்கியமான விசயம், பாஜகவை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருந்த இந்து அமைப்புகளின் வளர்ச்சி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் தவறியதைக் கூறலாம். பசுவளைய மாநிலங்களில் பெருநகரம், நகரம், கிராமம், மலைக்கிராமம் என பல்வேறு சூழல்களில் பல்கிப் பெருகிக்கொண்டிருந்த இந்து அமைப்புகளை காங்கிரஸ் குறைத்து மதிப்பிட்டு விட்டது. பாஜக என்ற கட்சியின் பெயரைக்கூறாமலேயே உள்ளூர் மக்களை மதத்தின் பெயரால் திரட்டி வைத்திருந்தன இந்த அமைப்புகள்.

இசுலாமிய தீவிரவாதம், இடது அமைப்புகளின் தீவிரவாதம் இவை மட்டுமே நாட்டுக்கு அச்சுறுத்தல் என நம்பிக்கொண்டிருந்தது காங்கிரஸ். இவை அனைத்தையும் காட்டிலும் நாட்டையே அடியோடு மாற்றும் பெரும்பான்மை வாதம் படுவேகமாக வளர்ந்து வருவதை அந்தக் கட்சி கவனிக்கவில்லை. இதன் பாரதூரமான விளைவுகளை முதன்முறையாக 2014-ஆம் ஆண்டில் பாஜக பெற்ற அபார வெற்றி சுட்டிக்காட்டியது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்தோம்; இப்போது ஓய்வெடுத்துக் கொள்வோம் என்பதுபோல, தோல்வியை குறித்து ஆய்வு செய்யாமல் காங்கிரஸ் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றது.

ராகுலின் எதிர்ப்பு போதுமானதாக இல்லை!

இந்து பெரும்பான்மைவாத சித்தாந்த பின்னணியில் அபார வெற்றியுடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது பாஜக. மெதுவாக தன்னுடைய சித்தாந்தத்தை அமலாக்கத் தொடங்கியது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், பசுமாட்டை முன்னிறுத்திய கும்பல் வன்முறைகள், தலித்துகள் – பெண்களுக்கு எதிராக பாஜக தலைவர்களின் அவதூறு பேச்சுகள், பாஜகவை சித்தாந்த ரீதியாக எதிர்த்த செயல்பாட்டாளர்களின் படுகொலைகள் நாட்டை உலுக்கின. தூக்கத்தில் இருந்த காங்கிரஸ் விழித்தது. பாஜகவின் சித்தாந்தமே எதிரிதான் என்பதை அறியாவிட்டாலும், அதன் மதவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கு அவ்வவ்போது எதிர்வினையாற்றியது காங்கிரஸ்.

காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தமே காரணமாக இருந்தது என ராகுல் காந்தி மேடைகளில் பேசினார். இது நீதிமன்ற வழக்காக மாறியது. ராகுல் நீதிமன்றத்துக்கு அலைகழிக்கப்பட்டபோதும், தனது கருத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனாலும், இந்து தேசியவாதத்தை எதிர்ப்பது எங்கே பெரும்பான்மை இந்துக்களை எதிர்ப்பதாகிவிடுமோ என பயந்தது காங்கிரஸ். வட மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின்போது, கோயில்களுக்குச் சென்றார் ராகுல். கோயில்களுக்குச் செல்வது இந்துக்களை கவரத்தான் என பாஜக தரப்பு அதை கேலி செய்தது. எதைச் செய்தால் மக்களின் மனங்களைப் பிடிக்கலாம் என்பதில் பாஜகவின் பாணியை பின்பற்றலாம் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். அதுவும் கைகூடவில்லை. பெரும்பான்மைவாதத்துக்கு எதிர் பெரும்பான்மைவாதம் ஆகிவிடாது. இது எளிய சூத்திரம்.

பாஜகவின் இரண்டாவது வெற்றியில் காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டதா?

முதல் வெற்றியைக் காட்டிலும் பாஜக இரண்டாவதாக பெற்ற வெற்றி, இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என எவரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. சங்க பரிவாரங்களின் நீண்ட நாளைய கனவான ‘இந்து அரசு’ இரண்டாவது வெற்றியில் சாத்தியமாகிக் கொண்டு வருகிறது. நிர்வகித்து வந்த காஷ்மீரை அம்மக்களின் உணர்வுகளையும் மீறி தனதாக்கிக் கொண்டது, அயோத்தியில் ‘இந்து பெரும்பான்மைவாத’த்தின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதை இஸ்லாமிய மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது, அஸ்ஸாமில் முசுலீம்களை வெளியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பது என முழு ‘இந்து அரசு’க்கான நிலையை நோக்கி பாஜக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்திய சுதந்திரத்தின்போது ‘பன்மைத்துவம்தான் இந்தியாவின் ஆன்மா’ என காங்கிரஸ் தலைவர்கள் உறுதியோடு நின்றது இன்று வெறுமனே வரலாறாக மட்டுமே எஞ்சும் நிலைக்கு நாடு சென்றுவிட்டது. வரலாற்று நூல்கள், பாடப்புத்தகங்களிலிருந்து இந்த வாக்கியமும்கூட பெரும்பான்மைவாத அரசால் நீக்கப்படலாம். சோசலிச இந்தியாவை கனவு கண்ட நேரு, இன்றிருக்கும் ஆட்சியாளர்களால் ஒரு எதிரி போலவே காட்டப்படுவது, காலக்கொடுமை! காந்தி தற்செயலாக இறந்தார் என பாடப்புத்தகங்களின் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். பிரிட்டீஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி, இறுதி வரை விசுவாசமாக இருப்பேன் என்றவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தரக் காத்திருக்கிறது ஆளும் அரசு.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத, பார்க்காத இந்தியாவை இனி வரும் காலங்களில் நாம் பார்க்க இருக்கிறோம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, பெரும் தொண்டர் படையைக் கொண்ட ஒரு கட்சியாக காங்கிரஸ் இதை முறியடிக்க, தனது மூதாதையர்களின் இந்தியாவை தக்க வைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது? சில்லறைத்தனமான விசயங்களில் கவனம் செலுத்தாமல், ஆக்கப்பூர்வமாக காங்கிரஸ் எப்போது சிந்திக்கும்? வாரிசு அரசியல், ஊழல் அரசியல் (இவை இரண்டிலும் காங்கிரஸைக் காட்டிலும் பாஜக மோசமானது) என்பதை ஒதுக்கிவிட்டு, காங்கிரஸை இன்னமும் நம்பிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். மக்களின் உயிர்வாழும் சுதந்திரம், அவரவர் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம், பன்மைத்துவத்தைக் காப்பாற்றும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. இதை காங்கிரஸ் எப்போது உணரப் போகிறது?